சென்னை: தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தலுக்கு முன்னதாக ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளனர். அதில் மே 2ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாகும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “இதனை நான் அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். என்னைக் குறிவைத்துச் செயல்படுன்றனர்.
“தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றபோது சிக்கிக் கொண்டனர். அதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தின்போதே விளக்கி விட்டேன்.
“கைப்பற்றப்பட்ட பணம் எனக்குச் சொந்தமானதல்ல. கைதானவர்கள் மூன்று பேர் மட்டுமல்ல. இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்குத் தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள்தான்.
இதுகுறித்து நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையைச் செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர். வழக்கமாக காவல்துறை மிரட்டி வாக்குமூலம் வாங்கும். விசாரணைக்கு முன்னிலையான பிறகே என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும்.
இதுதொடர்பாக நான் யார்மீதும் அவதூறு வழக்குத் தொடரப் போவதில்லை. இந்த வழக்கில் என்னைச் சிக்க வைக்க முடியாது. இந்த வழக்கால் எனக்கு விளம்பரம்தான் கிடைத்து வருகிறது.
“தற்போது வெளிமாநிலங்களுக்கு பிரசாரம் செல்லவுள்ளேன். எனவே, கூடிய விரைவில் சம்மனுக்கு முன்னிலையாகி விளக்கம் அளிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.