தமிழ்மொழி விழாவையொட்டி ‘உமறுப்புலவர் நினைவு அரங்கம்’ நிகழ்ச்சியுடன், மாணவர்களுக்கான கவிதை வாசிப்பு, ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்’ பயிலரங்கு என மூன்று அமர்வுகள் ஒன்றிணைந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அமைப்பு 2007ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோராண்டும் நீடித்த தமிழ்த் தொண்டாற்றுவோர்க்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு சமூக, தமிழ்த் தொண்டுக்காக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பனுக்கு அ.நா.மொய்தீன் விருது வழங்கப்பட்டது.
இவருடன் எம்.எச்.யூசுப்புக்கு அ.நா.மொய்தீன் விருதும் அப்துல் ரசாக் மரைக்காயருக்கு உமறுப்புலவர் விருதும் வழங்கப்பட்டன.
உயர்நிலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை வாசிப்புப் போட்டியில் ஏறத்தாழ 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் வாசிப்புக் காணொளியைச் சமர்ப்பித்திருந்தனர். அவற்றிலிருந்து முதல் மூன்று நிலைகளில் வந்த மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்குக் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் தொடங்கி, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞரேறு அமலதாசன், ஆசியான் கவிஞர் க து மு இக்பால், கவிஞர் பாரத் பூஷன் அகர்வால், ஆப்பிரிக்கக் கவிஞர் ஹவாய் ஆகியோரின் படைப்புகளை மாணவர்கள்.வாசித்தனர்
முதல் பரிசு பெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர் கவினேஷ் கணேசனுக்கு $100 பற்றுச்சீட்டும் இரண்டாம் பரிசு பெற்ற மைக்கேல் ஆல்பர்ட் ஹானா அக்ஷிதாவுக்கு $80 பற்றுச்சீட்டும் மூன்றாம் பரிசுபெற்ற கனகசபாபதி தனிஷ்காவுக்கு $50 பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில் தமிழார்வத்தினால் பங்கேற்ற யூ ஹுவா தொடக்கப் பள்ளி மாணவர் கண்ணன் பிரேம்குமார், கவிதை மனிதனைப் புதிதாக்கும் எனவும் தொடர்ந்து தமிழ் கற்றுத் தேர்ந்து பிற்காலத்தில் படைப்பாளியாக வேண்டும் எனத் தான் எண்ணுவதாகவும் சொன்னார்.
தொடர்ந்து ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்’ எனும் தலைப்பில் சிங்கப்பூர் கவிஞர் இறை. மதியழகன் வழிநடத்திய பயிலரங்கு நடைபெற்றது.
பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கவிதை நடை, சொற்கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினார் அவர். மேலும், எதுகை மோனை இயைபு உள்ளிட்ட கவிதைக்கான அடிப்படை இலக்கணம், வெண்பா எனப் பல அம்சங்கள் குறித்தும் அவர் பேசினார்.
பயிலரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு மூன்று புகைப்படங்கள் தரப்பட்டு, அது குறித்த கவிதை ஒன்றை எழுதவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் துணைச் செயலாளருமான திரு அமீர் ரோஷன், “எங்கள் அமைப்பில் அனைவரும் தமிழ்ப் பற்று மிக்கவர்கள். அனைவரும் சேர்ந்து அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.