சென்னை: திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி உள்ள நயினார் நாகேந்திரன் மீதான புகார் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நயினார் நாகேந்திரனுடன் தொடர்புடைய மூவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் செல்லவிருந்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுத்தார்.
இதையடுத்து நெல்லையில் சுயேட்சையாகப் போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
“நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“அதேபோல் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.