ஒரு சில காணொளிகள், மனிதநேயம் இருக்கிறதா என உங்களைக் கேள்வி கேட்க வைக்கும். சில காணொளிகளோ, மனிதநேயம் இன்னமும் உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
மனதைக் கவரும் அத்தகைய கானொளிகளில் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அதில் ஒரு இளம் பெண்ணின் பாவாடை கிழிகிறது. ஆனால் அவருடைய காதலருக்குப் பதிலாக, முன்பின் அறியாத ஒரு விவசாயிதான் அவருக்கு உதவ முன்வந்தார்.
வெள்ளை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த விவசாயி பேருந்து நிறுத்தத்திற்கு வருவது அந்தக் காணொளியில் தெரிகிறது.
தம்மிடம் கைக்கடிகாரம் இல்லாததால், அங்கு நின்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவரிடம் நேரத்தை விசாரிக்கிறார். மேலும் பேருந்தின் பாதையைப் பற்றியும் அந்த விவசாயி விசாரித்தது, அந்த ஆடவரை எரிச்சலடையச் செய்கிறது.
அந்த விவசாயி பேருந்துக்காக தொடர்ந்து காத்திருக்க, இளம்பெண் ஒருவர் காதலருடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்கின்றனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்த காதலர், அந்தப் பெண்ணையும் எழுந்திருக்கச் சொல்கிறார். அப்பெண் இருக்கையை விட்டு எழுந்ததும் அவரது பாவாடை பின்புறம் கிழிந்தது.
இதைப் பார்த்த அவருடைய காதலர், சூழ்நிலையைச் சரிசெய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக அப்பெண்ணைப் பார்த்து சிரிக்கிறார். இதனால் அந்தப் பெண் தர்மசங்கடமாக உணர்கிறார்.
அங்கு நின்றுகொண்டிருந்த விவசாயியே அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்தார். தாம் அணிந்திருந்த லுங்கியை உடனடியாக அவிழ்த்த அந்த விவசாயி, அதை அப்பெண்ணிடம் கொடுக்கிறார்.
அந்த லுங்கியைப் பெற்றுக்கொள்ளும் அப்பெண், தமது பாவாடை மீது அதைச் சுற்றி அணிந்துகொள்கிறார். அப்பெண்ணுக்கு உதவாமல் பார்த்து சிரித்த அவருடைய காதலரை அந்த விவசாயி திட்டுகிறார்.
விவசாயியின் உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண், அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற குனிந்தார். ஆனால், அதற்குப் பதிலாக அந்த விவசாயி அவர் முன்னால் கைகூப்பினார்.
“மனிதநேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது,” என்ற வாசகம் அக்காணொளியில் இடம்பெறுகிறது.