சிங்கப்பூரில் 1,300க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்து $18 மில்லியனுக்கும் மேல் சம்பந்தப்பட்ட பொய்யான வெளிநாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தை நடத்திய அமெரிக்க ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் நடந்தபோது மைக்கல் ஃபிலிப் அட்கின்ஸ், 51, சிங்கப்பூரில் தளம் கொண்ட ‘ஓரியஸ் கேப்பிடல்’ நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
அவர் அந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய பங்குதாரராக இருந்தார். திட்டத்தின் முழு கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து மட்டுமே வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர்களின் பணம் பயன்படுத்தப்பட்டது.
மற்ற வாடிக்கையாளர்களின் பணத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களிடம் பணம் செலுத்தப்பட்டது.
இறுதியில் ‘ஓரியஸ் கேப்பிடல்’ நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்கள் மொத்தம் $12.7 மில்லியன் பெற்றனர். அவர்கள் கிட்டத்தட்ட $6 மில்லியன் இழப்பைச் சந்தித்தனர்.
பொய்யான நோக்கத்திற்காக தொழில் நடத்திய குற்றத்தை ஏப்ரல் 15ஆம் தேதி அட்கின்ஸ், சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் ஒப்புக்கொண்டார்.
வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு ஒன்றுக்குப் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதிக்கும், 2014ஆம் ஆண்டு ஜூலை 15க்கும் இடைப்பட்ட காலத்தில், அந்த வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்களின் பணத்தில் $18 மில்லியனுக்கும் மேல் போடப்பட்டது.
அந்தப் பணம், வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அட்கின்ஸ் உட்பட, ‘ஓரியஸ் கேப்பிடல்’ நிறுவனத்தின் இயக்குநர்களுக்குச் செலுத்தப் பயன்படுத்தப்பட்டது.
அட்கின்ஸ் 2014ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டார். அவர் பிணையில் இருந்தபோது தப்பித்ததால், அவருக்கு எதிராக ‘இன்டர்போல்’ உத்தரவு விடுக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவில் இருந்ததாகத் தெரியவந்தது. 2020ஆம் ஆண்டு, அவரை இங்கு ஒப்படைப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் அவர் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இங்கு மீண்டும் கைதானார்.