ஆண்டிறுதி விடுமுறைக்காலம் என்பதால் சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
பயணம் மேற்கொள்ளும் பலர் பல நாணய மின்னிலக்க பணப்பைகளைப் பயன்படுத்துவர்.
அவற்றில் ரெவலுட், யூடிரிப், வைஸ் போன்றவை அடங்கும்.
இவற்றின் மூலம் சிங்கப்பூர் நாணயத்தை மற்ற நாணயங்களுக்கு மாற்றி அட்டைகளில் வைத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு செய்ய சில அட்டைகளுக்குக் குறைந்த அளவிலான கட்டணம் செலுத்த வேண்டும்.
சில அட்டைகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
கிட்டத்தட்ட 27 வயதிலிருந்து 42 வயது வரையிலானோரில் ஐந்தில் ஒருவர் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட யூடிரிப்பில் கணக்கும் பல நாணய அட்டையும் பயணப் பணப்பையும் வைத்துள்ளனர் என்று 2022ஆம் ஆண்டில் யூடிரிப் நடத்திய ஆய்வு கூறுகிறது.
உலகளாவிய நிலையில் தனக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான சில்லறை வர்த்தக வாடிக்கையாளர்கள் இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் ரெவலுட் தெரிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகளாவிய நிலையில் அதற்கு கூடுதலாக ஐந்து மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மின்னிலக்கப் பணப்பைகள் போட்டித்தன்மைமிக்க நாணய மாற்று விகிதங்களைத் தருவதால் அவை பிரபலமடைந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாது, அவற்றின் மூலம் குறைந்த கட்டணம் அல்லது கட்டணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்யலாம் என்பதால் வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைவிட அவை மலிவானவை.
இந்த மின்னிலக்கப் பணப்பைகள் பயணிகளுக்கு சௌகரியத்தைத் தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தும்போது சில ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகள் அளவுக்கு அவை பாதுகாப்பானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகள் கடுமையான நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
அவை அதிக அளவிலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதை அவர்கள் சுட்டினர்.
அத்துடன் உலகளாவிய நிலையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
மின்னிலக்கப் பணப்பைகளுக்கு அதைப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் கூறினர்.
மோசடிப் பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காணும்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் முழுமையான வாடிக்கையாளர் ஆதரவு வழங்குகின்றன. இதனால் உயர் நிலை பயனீட்டாளர் பாதுகாப்பு கிடைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.