சான் ஃபிரான்சிஸ்கோ: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திலிருந்து டிக்டாக் தளம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து மசோதாவை சட்டமாக்கினார்.
புது சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளதாக டிக்டாக் தலைமை நிர்வாகி சியூ ஷோ சியு புதன்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தார்.
“இது பெரிய தவறு, டிக்டாக் மீதான தடை பயனீட்டாளர்களின் குரலை தடை செய்வது போலானது” என்று அவர் டிக்டாக்கில் காணொளி வாயிலாக தெரிவித்தார்.
“அமெரிக்காவின் சட்டத்தில் கருத்து சுதந்திரம் மிக முக்கியமானது, அது நம் பக்கம் உள்ளது. நமது உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடுவோம்” என்றார் சியூ ஷோ சி.
டிக்டாக், இளையர்களிடையே பிரபலமாக இருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெய்ஜிங் தரவுகளைச் சேகரித்து பயனர்களை வேவுபார்க்க டிக்டாக் வகைசெய்வதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் 170 மில்லியன் பேர் டிக்டாக்கைப் பயன்படுத்துகின்றனர்.
டிக்டாக் பெய்ஜிங்கிற்கு அடிபணிவதாகவும் அது சீன அரசாங்கத்தின் பிரசாரத் தளமாக விளங்குவதாகவும் குறை கூறப்படுகிறது.