பாலியல் துன்புறுத்தலை முறியடிக்கும் வகையில் மாதருக்கு தனி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக இரு விரைவு ரயில் போக்குவரத்து சேவைகளில் மாதர் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாதரை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் அவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதற்காகவும் மலேசியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கு மலேசியாவில் இருபாலாரிடமும் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த இல்லத்தரசியான 55 வயது ஈ லீ லீ, இதைத் தாம் வரவேற்பதாகக் கூறினார். உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமது மகள் அன்றாடம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் தாம் இதனை வரவேற்பதாக அவர் கூறினார்.
“தாய்மாராக, நாங்கள் கவலைப்படுகிறோம். முடிந்தவரை மாதருக்கு மட்டுமேயான பெட்டிகளில் அமருமாறு மகளிடம் சொல்வேன்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். தானும் அவ்வாறு செய்வதாக அவர் சொன்னார்.
மாதருக்கான பெட்டிகளுக்கு வெளியிலும் உள்பகுதியிலும் இளஞ்சிவப்பு வில்லைகள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்கும். பெண்கள் பெட்டிகளுக்குள் ஆண்கள் நுழைவதைத் தடுக்க தொண்டூழியர்களும் துணை காவல்துறையினரும் ரயில்களிலும் நிலையங்களிலும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி காமராக்களும் இடம்பெற்றுள்ளன.
எம்ஆர்டி சேவை வழங்கும் ‘ராபிட் கேஎல்’ மாதருக்கான பெட்டிகளை காஜாங் எம்ஆர்டி பாதையில் 2023 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி புத்ராஜெயா வழித்தடத்தில் அறிமுகமானது. 2010 ஏப்ரல் முதல் கேடிஎம் இயக்கும் கேடிஎம் ரயில்களில் மாதருக்கு மட்டுமேயான பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஜப்பான், எகிப்து, பிரேசில் போன்ற நாடுகளும் பெண்களுக்கு தனி ரயில் பெட்டிகளை ஒதுக்கியுள்ளன.