சென்னை: தாம் இசையமைத்த சில பாடல்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் சில இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பு மேல்முறையீடு செய்தது. இம்முறை மனுவை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
ஆனால், இந்த உத்தரவை ஏற்காத ‘எக்கோ’ நிறுவனம், திரைப்படங்களின் தயாரிப்பாளர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே திரைப்பாடல்களைப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்க, இளையராஜா கோரும் ஊதியம் அளிக்கப்பட்ட பின்னர், இயல்பாகவே அவர் இசையமைத்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்குச் சென்றுவிடுகிறது என்றும் இசை நிறுவனத்தின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்நிலையில், பாடல் வரிகளைத் தரும் பாடலாசிரியர்கள், பாடகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன்தான் ஒரு பாடல் முழு வடிவம் பெறுகிறது.
எனவே, அவர்களும் பாடல்களுக்கு உரிமை கோரினால் என்னவாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.