தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஊழியரணி உறுப்பினர்கள், ‘லிங்க்’ உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுப்படியான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவ ஃபேர்பிரைஸ் குழுமம் $4.5 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான விலைக் கழிவுகளை வழங்கவுள்ளது.
இவ்வாண்டின் மே தினத்தையொட்டி மே, ஜூன் மாதங்களில் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்கும் குறிப்பிட்ட கோப்பித்தியாம் காப்பிக் கடைகளுக்கும் இது பொருந்தும்.
சென்ற ஆண்டு மே தினத்தையொட்டி இரண்டு மில்லியன் வெள்ளி மதிப்பிலான விலைக் கழிவுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு வழங்கப்படும் விலைக் கழிவுகளின் மதிப்பு அதில் இரு மடங்குக்கும் அதிகமாகும்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 25) முதல் மூன்று வாரங்களுக்கு என்டியுசி ஊழியரணி உறுப்பினர்களுக்கு சில அத்தியாவசியப் பொருள்கள் 50 விழுக்காட்டு விலைக் கழிவுடன் வழங்கப்படும். அதன்கீழ் ஏப்ரல் 25லிருந்து 28ஆம் தேதிவரை ‘எஃப்பி தாய் ஹொம் மாலி ரைஸ்’ அரிசி 13.90 வெள்ளிக்குப் பதிலாக 6.95 வெள்ளிக்கு விற்கப்படும். அதற்குப் பிறகு வரும் வாரங்களுக்கான விலைக் கழிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
மே தினத்தைக் கொண்டாட, ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் கோப்பித்தியாமுடன் இணைந்து என்டியுசி ஊழியரணி உறுப்பினர்களுக்கு 50 காசு விலையில் காப்பி, தேநீர் வழங்கும். மே, ஜூன் மாதங்களில் குறிப்பிட்ட கோப்பித்தியாம் காப்பிக் கடைகளுக்கு இது பொருந்தும்.
மேலும், மே தினத்தன்று அவ்வாறு 50 காசுக்கு காப்பி, தேநீர் வாங்குவோரின் பிள்ளைகளுக்கு ‘மைலோ’ பானம் இலவசமாக வழங்கப்படும்.
இவற்றோடு, 500க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் பொருள், சேவை வரியில் ஒரு விழுக்காடு கழிவு வழங்கும். இந்தச் சலுகை இப்போதிருந்து ஜூன் மாதம் 30ஆம் தேதிவரை வழங்கப்படும்.