தெம்பனிசில் புதன்கிழமை (ஏப்ரல் 22) இருவரின் உயிரைப் பறித்த விபத்துக்குப் பிறகு காயமுற்றவர்களுக்கு உதவிய திரு ஷேக் இம்ரான் ஷேக் அகமது, 40, சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தாம் இன்னமும் மீளவில்லை என்று கூறினார்.
காரில் சிக்கியிருந்த நிலையில் முகம்மது அஸ்ரில் தம் மகளின் பெயரை சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருந்ததை திரு இம்ரான் நினைவுகூர்ந்தார்.
அந்த விபத்தில் சிக்கிய அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்ரில், 17, அதே நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த தொழில்நுட்பராக இருந்த திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப், 57, என்பவரும் அந்த விபத்தில் உயிரிழந்தார். அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வேனில் அவர் இருந்தார்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த தெம்பனிஸ் அவென்யூ 1, தெம்பனிஸ் அவென்யூ 4 சந்திப்பில் புதன்கிழமை (ஏப்ரல் 24) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு இம்ரான் பேசினார்.
ஒரு வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், விபத்து நிகழ்ந்ததற்குப் பிறகு சாலைச் சந்திப்பில் போக்குவரத்தை சீர்ப்படுத்த உதவுவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன.
அன்றைய தினம் பிரேடலில் உள்ள பள்ளியில் தம்முடைய மூன்று பிள்ளைகளை இறக்கிவிட்டு தெம்பனிசில் உள்ள தமது வீட்டிற்கு திரு இம்ரான் காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். முன் பயணி இருக்கையில் அவருடைய மனைவி அமர்ந்திருந்தார்.