கல்விக்கு அப்பாற்பட்டு இதர நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 11 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
லீ குவான் யூ விருது
உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் நிதிஷ் தியாகராஜன், 20, தொடக்கத்தில் தொடக்கக் கல்லூரி செல்ல வேண்டியதாக இருந்தது. தம் தந்தை காணொளித் தொகுப்பாளர் என்பதால் நிதிஷ் இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அந்த ஆர்வம் அவரை பலதுறைத் தொழிற்கல்லூரிப் பாதையில் செல்ல ஊக்கமளித்தது. தகவல் தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்றுள்ள நிதிஷ், மென்பொருளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். செயலிகளைத் தயாரிப்பதிலும் மென்பொருள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும் தம்மை அவர் அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்றபோது, பேருந்துகளின் வருகை நேரத்தைத் துல்லியமாகக் குறிக்கும் ஒரு செயலியை அவர் உருவாக்கினார்.
“முன்பு நான் பேருந்தின் வருகை நேரத்தைத் தெரிந்துகொள்ள ஒரு செயலியை பயன்படுத்தியபோது எனக்கு அந்த அனுபவம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அதனால் நாம் ஏன் ஒரு செயலியை உருவாக்கக் கூடாது என்று யோசித்தேன்,” என்று நிதிஷ் சொன்னார்.
‘டிரான்சிடோ’ என்று அழைக்கப்படும் அச்செயலி, 1,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. 600 பேர் அதை பயன்படுத்துகின்றனர்.
“அச்செயலி துரிதமாகச் செயல்படும். அதைப் பயன்படுத்தும்போது விளம்பரங்கள் இல்லாமல் தடையற்ற அனுபவம் கிடைக்கும்,” என்று நிதிஷ் கூறினார்.
இதைத் தாண்டி ‘ஹேக்கத்தான்’ போட்டியிலும் நிதிஷ் கலந்துகொண்டார். சமூகத்தில் தேவைகளைக் கண்டறிந்து வாழ்க்கையை மேம்படுத்தும் பயனுள்ள தீர்வுகளைக் காண்பதே அப்போட்டியின் நோக்கம். பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஆர்வம் கொண்டுள்ள நிதிஷ், பலதுறைத் தொழிற்கல்லூரியில் தலைமைத்துவப் பொறுப்புகளையும் ஏற்றார்.
தகவல் தொழில்நுட்பம் மாணவ தன்னார்வக் குழுவில் சேர்ந்து அங்குப் பல திட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். இறுதி ஆண்டுக் கல்வியில் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பில் அவர் வேலைப் பயிற்சி மேற்கொண்டார்.
ஓராண்டு வேலைப்பயிற்சியில் நிதிஷ் கற்றுகொண்டவை பல. குடிமக்களை மையமாகக் கொண்டு அரசாங்கம் எவ்வாறு மின்னிலக்கச் சேவைகளை வழங்குகிறது என்பதை நிதிஷ் ஆழமாக தெரிந்துகொண்டார்.
வகுப்பறைக்கு அப்பாற்பட்டு சேவை மனப்பான்மை கொண்டுள்ள நிதிஷ், ‘என்ஜினியரிங் குட்’ எனும் அமைப்பின்கீழ் வசதிகுறைந்த குடியிருப்புகளில் வசிப்போரின் மடிக்கணினிகளைப் பழுதுபார்க்க உதவி வருகிறார்.
லீ குவான் யூ விருது பெற்றுள்ள அவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டப்படிப்பு மேற்கொள்ளவுள்ளார்.
கேப்பிடாலாண்ட் (ஆல் ரவுண்ட் எக்சலன்ஸ்) விருது
உணவு தயாரித்து பரிமாறும் தொழிலில் ஈடுபட்டு வரும் தம் பெற்றோரைப் பார்த்து வளர்ந்த ரிஃபாத் ஹசன் படே, 20, அவர்களுக்கு அத்தொழிலில் உதவி வந்தார். சமைப்பதில் ஆர்வம் இருந்தாலும் ரிஃபாத் பெற்றோரின் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற இலக்குடன் இருந்தார்.
அதற்கு வியாபார உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதால், ‘ஓ’ நிலைத் தேர்வு முடிந்ததும், பலதுறைத் தொழிற்கல்லூரியில் தந்தையின் ஊக்கத்தில் வணிகத் துறையில் பட்டயம் பெற அவர் முடிவெடுத்தார்.
உயர்நிலைப் பள்ளியில் ரிஃபாத் கல்விக்கு அப்பாற்பட்டு தன்னை பல நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார். இதனால் அவரின் மதிப்பெண்கள் சரியத் தொடங்கின. அறிவியல் பாடங்களை அதிகம் தேர்ந்தெடுத்த அவர் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றார்.
‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெறாவிட்டாலும், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ரிஃபாத் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்வியில் கவனம் சிதறாமல் இருக்க, தொழில் சார்ந்த நடவடிக்கைகள் சிலவற்றில் மட்டும் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கல்விக்கு ஏதுவாக இருக்கும் இணைப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் வருங்காலத்தில் வணிகத்துறையில் முத்திரை பதிக்க தேவையான திறன்களை வளர்ப்பதிலும் ரிஃபாத் இறங்கினார். அதிக மதிப்பெண்கள் எடுத்ததால் அவரது பெயர் இயக்குநரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்பு ஆசியான் மெய்நிகர் தொழில்முனைப்பு ‘ஹேக்கத்தான்’ போட்டியில் அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
தொழில் மூலம் ஒருவரின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற முனைப்பு கொண்டுள்ள ரிஃபாத், பாதுகாக்கப்பட்ட பூங்கொத்துகளைத் தயாரிக்கும் தனது சுய தொழிலுக்கும் நேரம் ஒதுக்குகிறார்.