நாட்டுக்குச் சேவை புரியவும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தன்னைத் தயார்படுத்தி வருகிறார் 19 வயது ஷவின் குமார் கிஷோர் குமார்.
இவருக்கு உள்துறைக் குழுவின் சிங்கப்பூர் காவல்துறை பட்டயப் படிப்பு நிதி ஆதரவு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் உள்துறைக் குழு நிதி ஆதரவு விருதைப் பெற்ற 21 பேரில் ஷவினும் ஒருவர்.
2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருது, நன்னெறி விழுமியங்களை வெளிப்படுத்தி, உள்துறைக் குழுவழி சிங்கப்பூரர்களுக்குச் சேவைபுரிய விரும்பும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் உள்துறைக் குழு நிதி ஆதரவு விருதளிப்பு நிகழ்ச்சி, ஏப்ரல் 25ஆம் தேதி பிடோக் ரெசவோர் உள்துறைக் குழு என்எஸ் மன்றத்தில் நடைபெற்றது. தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப்பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றியபின் விருதுகளையும் வழங்கினார்.
அவர் தமது உரையில், வருங்கால சிங்கப்பூரின் பாதுகாப்பிற்காக அதிக பொருள்செலவு செய்யப்படுவதால் உள்துறைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பேரார்வம் கொண்டவர்களே பணியில் அமர்த்தப்படுகிறார்கள் என்றார்.
பட்டப்படிப்பு முடித்தவுடன் இந்த விருதைப் பெற்றவர்கள், உள்துறைக் குழுவின் ஐந்து துறைகளில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிவர். இவை சிங்கப்பூர் காவல் துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் சிறைச் சேவை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவையாகும்.
தேசிய மாணவர் காவல் படையில் பயிற்சி கண்காணிப்பாளர் பதவியிலிருந்த ஷவின், விரைவில் சிங்கப்பூர் காவல்துறையில் பணியாற்ற அதிக ஆர்வமுள்ளதாக தெரிவித்தார். தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சட்ட மேலாண்மை படிப்பைப் பயில்கிறார்.
தன் பெற்றோர் சேவைத் துறையில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் என்று கூறினார் ஷவின். தாயார் தொண்டூழியத்திற்குப் போகும்போதெல்லாம் தன்னையும் அழைத்துச் சென்றதால் அவருக்குச் சிறுவயதிலிருந்தே சேவை மீதும் சமூகம் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டது என்றார்.
ஷவின் மும்மொழி தெரிந்தவர். ஆங்கிலம், தமிழ், சீனம் என்று மூன்று மொழிகளிலும் உரையாடத் தெரியுமென்பதால் எதிர்காலத்தில் காவல் அதிகாரியாகத் தான் பணிபுரியும்போது வெவ்வேறு இனத்தவரை அவர் அணுக மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
காவல்துறையுடன் நான்காண்டு கட்டாயச் சேவையைத் தொடர்ந்து மேல்படிப்பு முடித்துவிட்டு மூத்த அதிகாரியாகப் பணிபுரிவது இவரது லட்சியம்.
தன்னைப்போல காவல் அதிகாரியாக வேண்டும் என்ற பேரார்வம் கொண்ட இளையர்களை எதிர்காலத்தில் சட்ட அமலாக்கம் அல்லது பொதுப்பணித் துறையில் சேர்வதற்கு ஷவின் ஊக்குவித்தார்.
“இது சற்று மனவுளைச்சல் தரும் வேலையாக இருந்தாலும்கூட, ஒரு காவல் அதிகாரியாக நான் என்னை உணரும்போது ஏற்படும் மனநிறைவு ஒரு பெரிய சாதனை புரிவதற்குச் சமம்,” என்று பெருமிதம் கொள்கிறார் ஷவின்.