சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கையையும் புகழையும் கொண்டாடும் விதமாக ‘மண்டலா கிளப்’ கலாசார மையம், அவரது சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் டேனியல் ஆஷ்ரம் வெண்கலம், துருப்பிடிக்காத எஃகு உலோகங்களைப் பயன்படுத்தி வடித்துள்ள இந்தச் சிலைகள், 31 புக்கிட் பாசோ ரோட்டிலுள்ள கடைவீட்டில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமரர் லீயின் முழு உருவம் கொண்டுள்ள சிலை ஒன்றையும் அவரது முகத்தை மட்டும் சித்திரிக்கும் சிற்பம் ஒன்றையும் செய்ய ‘ரிஃபைனர்’, ‘எஸ்3டி ஸ்டுடியோஸ்’ கலை நிறுவனங்கள் திரு ஆஷ்ரத்தைப் பணித்தன.
சிங்கப்பூர் மலேசியாவைவிட்டுப் பிரிவதாக அமரர் லீ அறிவிப்பதற்குமுன் அவர் எப்படி தோற்றமளித்தார் என்பதைக் கற்பனையாகச் சித்திரிக்கிறது முதல் சிற்பம்.
எச்சரிக்கையுடன் முன்னோக்கி அமர்ந்தவாறு, சிங்கப்பூர் எதிர்நோக்கும் மாபெரும் சவால்களைப் பற்றி அமரர் லீ சிந்திப்பதை அச்சிற்பம் காட்டுவதாக ‘மண்டலா கிளப்’, ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
அத்துடன், துடிப்பான, எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய நாட்டை உருவாக்க முற்படும் கனவு கொண்டுள்ள சிங்கப்பூர், முக்கிய மாற்றத்தை எதிர்நோக்கும் நேரத்திலும் கடந்த காலத்தில் அமரர் லீ வழங்கிய அறிவுரைகள் இன்றும் எதிரொலிப்பதை இரண்டாவது சிலை காட்டுகிறது.
சிங்கப்பூரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய அமரர் லீயின் சிலைகளைக் காட்சிக்கு வைப்பதில் உற்சாகம் அடைவதாக மண்டலா கிளப்பின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான பென் ஜோன்ஸ் தெரிவித்தார்.