சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, ‘இடம் பொருள் தமிழ்’ எனும் தலைப்பில் தமிழ் சொற்கள் தொடர்பான குதூகலப் போட்டி ஒன்றுக்குச் சிற்பிகள் மன்றம் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டுவரும் இந்நிகழ்ச்சி, கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல்முறையாக மீண்டும் நேரடி நிகழ்ச்சியாக வெளிப்புறத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள், கொவிட்-19 தொற்று பரவலுக்கு முன்னரே தொடங்கியதாகக் கூறினார் சிற்பிகள் மன்றத்தின் பொருளாளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான 59 வயது திரு எம் குணசேகரன்.
“இந்த ஆண்டு, சிங்கப்பூர் ஆகாயப்படையின் வரலாற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதற்குத் தொடர்புடைய புதிய தமிழ் சொற்களை அவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் போட்டியைத் திட்டமிட்டுள்ளோம்,” என்று விளக்கினார் அவர்.
தொடக்கநிலை 5, 6 மற்றும் உயர்நிலை 1,2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மெக்பெர்சன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி டின் பெய் லிங் கலந்துகொண்டார்.
தமிழ்மொழியின் ‘ஆற்றல்’ கருப்பொருளை இரண்டு விதத்தில் இந்நிகழ்ச்சியில் விளக்கியுள்ளதாக கூறினார் சிற்பிகள் மன்றத்தின் தலைவியும் ஏற்பாட்டுக் குழுத் தலைவியுமான செல்வி ஆர். ஜி. திருச்செல்வி.
“சிங்கப்பூரின் ராணுவ வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஆகாயப்படையின் ஆற்றல் எவ்வளவு முக்கியமானது என்பதை மாணவர்கள் அறிந்திட வேண்டும். அதேவேளை, சுவையான வழியில் தமிழ்மொழியை அவர்களுக்குக் கொண்டு சேர்த்து, அவர்களது தமிழ் ஆற்றலையும் மேம்படுத்த விரும்புகிறோம்,” என்றார் செல்வி திருச்செல்வி.
ஆகாயப்படையைப் பற்றிக் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்குக் கேள்வித்தாள்களில் தமிழில் சரியாகப் பதிலளித்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஈசூன் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 வயது பிரணாவ் ரமேஷ் பழங்காலத்தில் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் பற்றியும் விமானத்துறையைப் பற்றியும் தான் நிறைய கற்றுக்கொண்டதாகக் கூறினார். மேலும், புதிய தமிழ் சொற்கள் பலவற்றையும் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
தம் மகனுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 38 வயது திருமதி ஆர்த்தி கண்ணன், பெரியவர்களுக்கும் சுற்றிப் பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டதால் தம் மகனோடு தாமும் சேர்ந்து நிறைய புதிய தகவல்களை அறிந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி வாய்ப்பாக இருந்ததாகக் கூறினார்.