பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இளையர் பொதுமக்களில் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
பெர்த் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள வில்லேட்டன் வட்டாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. தாக்குதல் ஆஸ்திரேலிய நேரப்படி மே 4ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்ததாகப் பெர்த் காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்தில் ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக்கொண்டு அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தவர்களைத் துரத்திக்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
இதனால் அங்கு பதற்றநிலை நிலவியது.
தாக்குதல் நடத்தியவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
காயமடைந்தோர் எண்ணிக்கை தொடர்பாகக் காவல்துறை இன்னும் தகவல் வெளியிடவில்லை.
ஆஸ்திரேலிய நேரப்படி மே 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் ஆடவர் ஒருவர் காவல்துறையுடன் பலமுறை தொடர்புகொண்டதாகவும் தாம் வன்முறையைக் கட்டவிழ்க்க இருப்பதாகவும் கூறியதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“தாக்குதல் நடத்திய இளையர் இணையம் வழி தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதன்படி நடந்திருக்கக்கூடும். அவர் தனி ஒருவராக இத்தாக்குதலை நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“சம்பவத்துக்கு முன்பு அவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த மேற்கு ஆஸ்திரேலிய முஸ்லிம் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
“தகவல் கிடைத்ததும் ஒரு சில நிமிடங்களில் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுத்தனர்,” என்று திரு குக் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இளையருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் இணையம்வழி பயங்கரவாத சித்தாந்தத்துக்கு ஈர்க்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டதாகவும் காவல்துறை ஆணையர் கர்னல் பிளாஞ் தெரிவித்தார்.