சோல்: தென்கொரிய தூதரங்களையும் தங்களது வெளிநாட்டுவாழ் குடிமக்களையும் குறிவைத்து வடகொரியா தாக்கத் திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை (மே ஆம் தேதி) அன்று கூறியது.
இதைத் தொடர்ந்து தென்கொரிய வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டில் ஐந்து நாடுகளில் உள்ள தனது தூதரகங்களின் விழிப்பு நிலையை அதிகரித்துள்ளது.
‘தி நேஷனல் இன்டெலிஜன்ஸ் சர்விஸ்’ என்ற அந்த உளவு அமைப்பு வடகொரியா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதை தெரிவிக்கும் பல சமிக்ஞைகளை தான் கண்டறிந்துள்ளதாக கூறியது. வடகொரியா சீனா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு போன்ற இடங்களில் உள்ள தனது தூதரக ஊழியர்கள், குடிமக்கள் ஆகியோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாக தென்கொரியா தெரிவித்தது.
“மேற்கூறப்பட்ட நாடுகளில் எங்கள் தூதரகங்களை வேவுபார்க்க வடகொரியா ஒற்றர்களை அனுப்பியுள்ளது. அத்துடன், அது பயங்கரவாதத் தாக்குதல் நோக்கில் தென்கொரிய குடிமக்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடகொரியர்கள் பலர் தென்கொரியாவில் தஞ்சம் புகுந்துள்ளது தொடர்பாக வடகொரியா இவ்வாறு நடந்து கொள்கிறது என்று தென்கொரிய உளவு அமைப்பு கூறியது. கொவிட் கொள்ளைநோயால் உயர் பதவியில் இருந்த பல வடகொரியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்தனர். பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் அவர்கள் தங்கள் நாட்டு ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் நாடு திரும்பாதது காரணமாக இருக்கலாம் என்று தென்கொரிய உளவு அமைப்பு விளக்கியது.