மவுண்ட் சினாயில் உள்ள பழைய ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வளாகம், புதிய குடியிருப்பு மேம்பாடுகளுக்கும் இதர வசதிகளுக்கும் வழிவிட விரைவில் இடிக்கப்படும்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), அப்பகுதியில் ஆராயப்பட்டுவரும் தற்போதைய திட்டங்களில் புதிய பொது வீடமைப்புத் தெரிவுகள், குழந்தைப் பராமரிப்பு, சில்லறை விற்பனை வசதிகள், பள்ளி ஒன்றும் அடங்கும். இத்திட்டங்கள் மறுஆய்வுக்கு உட்பட்டவை.
புதிய நடைபாதை இணைப்புகள் மூலம் ரயில் பாதை (ரயில் காரிடார்) போன்ற பசுமை இடங்களுக்கு நேரடியாகச் செல்லும் வசதியைக் குடியிருப்பாளர்கள் பெறலாம் என்று வீவக கூறியது.
எண் 53 மவுண்ட் சினாய் சாலையில் அமைந்துள்ள அந்த நிலப்பகுதியில் 1984 முதல் 2004 வரை ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பயின்றனர். பின்னர் ராஃபிள்ஸ் கல்விக் கழகத்துக்குப் பக்கத்தில் உள்ள பீஷான் வளாகத்துக்கு ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி இடமாறியது.
பழைய ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வளாகம் இடிக்கப்படுவதற்கு ஜனவரி 11ஆம் தேதி வீவகவுக்கு எழுத்துப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் இணைய வரைபடம் காட்டுகிறது. ஆணையத்தின் பெருந்திட்டத்தின்படி, அப்பகுதி குடியிருப்பு மேம்பாடுகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ளது.
பழைய ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வளாகத்தை இடிப்பதற்கான விண்ணப்பத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வீவக சமர்ப்பித்திருந்தது. அந்த வளாகத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆறு புளோக்குகள், ஒரு மாடிக் கட்டடம், கீழ்த்தளத்துடன் கூடிய மற்றோர் ஒற்றைத் தளக் கட்டடம் உள்ளன.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டு வரை அந்த வளாகத்தை இடிக்கும் பணிகள் நடைபெறும் என வீவக தெரிவித்தது.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி எம்.பி. கிறிஸ்தஃபர் டி சூசா சனிக்கிழமை (மே 17) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், மவுண்ட் சினாய் வளாகம் இடிக்கப்படும்போது குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து தாம் பணியாற்றப் போவதாகக் கூறினார். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் பிற்பாடு வெளியிடப்படும் என்றார் அவர். 2017 முதல் 2019 வரை, மவுண்ட் சினாய் தளம், யுனோயா தொடக்கக் கல்லூரியின் தற்காலிக வளாகமாகப் பயன்படுத்தப்பட்டது. சின் மிங் அவென்யூவில் அக்கல்லூரியின் நிரந்தர வளாகம் அப்போது கட்டப்பட்டு வந்தது.
இதற்கிடையே, பழைய ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வளாகம் ஜனவரியில் காலி செய்யப்பட்டது என்றும் மற்ற பயன்பாடுகளுக்காக அது அரசாங்கத்திடம் திரும்ப வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது.