போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஷதோல் நகரில் காவல்துறைத் துணை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் மகேந்திர பக்ரி.
இவர், சனிக்கிழமை (மே 4) மாலை சக காவலர்கள் இருவருடன் சேர்ந்து, சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் பகுதிக்குச் சென்றார்.
அப்போது, கள்ளத்தனமாக மணலை ஏற்றிக்கொண்டு விரைந்த டிராக்டரை பக்ரி தடுக்க முற்பட்டபோது, அவர்மீது டிராக்டர் ஏறியது. இதனால் அவ்விடத்திலேயே அவர் மாண்டுபோனார்.
உடன் சென்ற பிரசாத் கனோஜி, சஞ்சய் துபே என்ற இரு காவலர்களும் காயமின்றித் தப்பினர்.
இதனையடுத்து, டிராக்டரை ஓட்டியவரும் அதன் உரிமையாளரின் மகனும் கைதுசெய்யப்பட்டனர். டிராக்டர் உரிமையாளரான சுரேந்திர சிங் தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பற்றி தகவல் தருவோர்க்கு ரூ.30,000 வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், குறிப்பாக சோன் ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தல் கொடிகட்டிப் பறப்பதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே ஷதோல் பகுதியில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பிரசன் சிங் என்ற வருவாய்த்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மணல் கடத்தல் கும்பல்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மாநில வேளாண்துறை அமைச்சர் ஏடல் சிங் பேசிய காணொளி வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குவாலியரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது அவ்வாறு அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.